இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியீடு தாமதமாகி வந்தது.

இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த தருணத்தில், முதலில் படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து, அதிகாலை நேரத்தில் முழு மூன்று மணி நேர திரைப்படமும் ஆன்லைனில் வெளியானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை கடுமையாக கண்டித்து நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் அறிக்கைகள் வெளியிட்டனர். மேலும், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான 9 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். கார்த்திகேயன், குற்றத்தின் தீவிரத்தையும், விசாரணையின் தற்போதைய நிலையும் கருத்தில் கொண்டு, அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு, திரைப்பட காப்புரிமை மீறலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Listen News!