சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ‘பராசக்தி’. வெளியான நாளிலிருந்தே இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக சமூகப் பிரச்சினைகள், மொழி உணர்வு, அரசியல் பின்னணி ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், பல்வேறு தரப்பினரிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

சீமான் ‘பராசக்தி’ திரைப்படம் குறித்து பேசுகையில், “இந்த படம் மொழிப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம் அல்ல. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த மொழிப் போராட்டத்தின் உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு, அதற்குள் ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “மொழிப் போராட்டம் இப்படித்தான் நடந்தது என சொல்ல முடியாது. காதல், அண்ணன்–தம்பி உறவு போன்றவற்றை சேர்த்து ஒரு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு சினிமா பார்வை.” என்று விளக்கமளித்தார்.
அத்துடன், திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “தமிழ் வாழ்க” என்று முழக்கமிடும் காட்சியை குறிப்பிட்ட சீமான், “அந்த காட்சியை பார்க்கும் போது, நானே ‘தமிழ் வாழ்க’ என்று கத்தியது போல ஒரு உணர்வு வந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, மொழி உணர்வும், அரசியல் உணர்வும் கொண்ட பலரிடையே கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, மொழி அடையாளம் குறித்த காட்சிகள் படத்தில் வலுவாக இடம்பெற்றிருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
Listen News!