• Jul 02 2026

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் ‘ரன்’... ரீ-ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல், ஆக்சன், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் இணைத்து ரசிகர்களை கட்டிப்போட்ட ‘ரன்’ திரைப்படம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரீ-ரிலீஸ் தொடர்பான புதிய தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், வெளியான காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. காதல் கதையுடன் அதிரடியான ஆக்சன் காட்சிகளையும் இணைத்து உருவான இப்படம், அன்றைய ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

தயாரிப்பாளர் எ. எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் – மீரா ஜாஸ்மின் ஜோடியின் திரை ரசனை ரசிகர்களிடம் நீண்ட காலம் பேசப்பட்ட ஒன்றாக அமைந்தது. மேலும், மீரா ஜாஸ்மின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ‘ரன்’ திரைப்படம், 2002-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் திகழ்ந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படம் ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. அதன்படி, வருகிற 10-ம் தேதி ‘ரன்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் வெளியாகும் இந்த கிளாசிக் திரைப்படத்தை காண புதிய தலைமுறை ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால், படத்தின் ரீ-ரிலீஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement