தமிழ் திரைப்படத் துறையில் முக்கிய அமைப்பாக செயல்பட்டு வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் தற்போது இடம்பெறுகின்றது. சங்கத்தின் தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட நிர்வாகத்தை அமைக்கும் தேர்தல் இன்று நடைபெற்றது.
2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் இந்த தேர்தல், தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத் துறையில் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தயாரிப்பாளர்களை பாதித்துள்ளன. இதனால், இந்த தேர்தல் மாற்றத்திற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர்களின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் அதன்போது, “தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு என்பது எல்லாருக்குமே தெரியும். வெற்றி பெற்று வருபவர்கள் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிற முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
Listen News!