பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சமூக பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. குறிப்பாக, கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இந்த படத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

‘கொம்பு சீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ள பொன்ராம், கிராமிய கதைக்களம், உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மற்றும் மக்கள் மனதை தொடும் திரைக்கதை ஆகியவற்றால் பெயர் பெற்ற இயக்குநர். அவருடன் இணைந்து சண்முகபாண்டியன் நடித்துள்ள இந்த படம், அவரது நடிப்பு பயணத்தில் முக்கியமான ஒரு படியாக பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த நடிகராகிய சரத்குமாரின் நடிப்பு, படத்திற்கு கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது.
‘கொம்பு சீவி’ படத்தின் இன்னொரு சிறப்பு அம்சமாக, தர்ணிகா என்ற புதுமுக நடிகை இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சண்முகபாண்டியனுடன் ஜோடியாக நடித்துள்ள அவர், கதைக்கு ஏற்ற வகையில் தனது பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று வெளியாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படம், தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தை பார்த்த பின் சண்முகபாண்டியனின் அம்மா பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
அவர் கூறுகையில், “மக்கள் பார்த்துக் கொடுக்கிற தீர்ப்புத் தான் மகேசன் தீர்ப்பு என்று நான் நினைக்கிறேன். அதனால நீங்கள் எல்லாரும் படம் பார்த்திட்டு உங்களோட ரிவ்யூ கொடுக்கணும். எல்லாரும் தியேட்டரில போய் படத்தைப் பார்க்கணும். உங்களுடைய ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு சண்முகபாண்டியனுக்கு வேணும். மக்களின் கருத்துக்காக நான் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Listen News!