• Jul 07 2024

இவரின் கதையை மட்டும் படமாக்கினால் ஆஸ்கர் வெல்லும்: இயக்குநர் மிஷ்கின்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் தூங்காநகர நினைவுகள் நூலில் உள்ள குஞ்சரத்தம்மாள் கதையை படமாக்க விரும்புவதாகவும், அந்தப்படம் ஆஸ்கர் விருதை வெல்லும் என பேசிய இயக்குநர் மிஷ்கின், உலகில் நல்லது செய்யும் எல்லா பெண்களும் குஞ்சரத்தம்மாள் தான் என உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.

மதுரையின் வரலாறுகளைப் பற்றி எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய "தூங்காநகர நினைவுகள்" நூல் அறிமுக விழா மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மிஷ்கின், பேராசிரியர் சுந்தர் காளி, எழுத்தாளர் ஷாஜகான், பேராசிரியர் பிரபாகர், ஊடகவியலாளர் விஜயானந்த் ஆகியோர் பங்கேற்று நூலை அறிமுகம் செய்தனர்.

"இரவு முழுவதும் உணவு தரும் ஒரே நகரம் மதுரை தான். விடிய விடிய கதையை, கலையை ரசிக்கும் ரசிகர்கள் வாழும் ஒரே நகரம் மதுரை. மேலும் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானித்த நகரம் மதுரை. திண்ணை இல்லாத வீடே மதுரையில் கிடையாது. வந்தவர்கள் அனைவருக்கும் சோறு போட்ட ஊர் மதுரை.உலகத்திலேயே, சுவடிகளை எழுதவதற்கு பயன்படும் எழுத்தாணிகளை செய்து கொடுத்த கலைஞர்கள் இருந்ததும், அவர்களின் நினைவாக எழுத்தாணிக்கார தெரு என்ற தெருவை கொண்டுள்ள ஒரே ஊரும் மதுரை தான். காலனி ஆதிக்கம் மதுரையின் தொன்மையையும் உடைக்கும்.

ஆனால், நினைவுகளின் வழியாகவும், ஆவணப்படுத்துதல் வழியாகவும் தான் மதுரையை காப்பாற்ற முடியும். மேலும் மதுரையை ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், மாங்குடி மருதனார் உள்ளிட்ட எவ்வளவோ பேர் பாடியது போல முத்துக்கிருஷ்ணனும் பாடியதன் சாட்சியே தூங்காநகர நினைவுகள் நூல்" என குறிப்பிட்டார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "சித்திரம்பேசுதடி படம் வெளியான பின்னர் மதுரையின் சாலை ஒன்றில் நின்று கொண்டிருக்கையில், என்னைப் பார்த்து ஒருவர் ஒழுங்கா படம் எடு என எச்சரித்து விட்டுப் போனார். என்னுடைய முதல் ரசிகர் மதுரைக்காரர் தான்.அத்தோடு நான் பிறந்த ஊர் திருப்பத்தூராக இருந்தாலும், வளர்ந்த ஊர் திண்டுக்கல்லாக இருந்தாலும், மதுரையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. மதுரையில் இரவு 1 மணிக்கு ஐஸ்கிரீம் தேடி அலைந்தோம். ஆனால், சூடாக பருத்திப்பால் கிடைத்தது. வாழ்நாளில் அந்த நேரத்தில், அப்படி ஒரு பானத்தை நான் குடித்ததே இல்லை.

மேலும் மதுரை பின்புலத்திலிருந்து திரையுலகிற்கு வந்த பாரதிராஜா, இளையராஜா, பாலா, வடிவேலு ஆகிய 4 பேரை எனக்கு மிகவும் பிடிக்கும். இளையராஜா என்ன வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால், அவருக்கான கை தட்டல்களை நாம் மறுக்க கூடாது. மதுரையையும், வைகையையும் மறக்க முடியாதது போல், இளையராஜாவையும் பாரதிராஜாவையும் மறக்கவே முடியாது. தமிழ் சினிமாவில் தன்னுடைய உடல்மொழியால் வடிவேலு முன்வைத்த ஒரு அடியை கூட வேறு யாருமே செய்ததில்லை.

தூங்காநகர நினைவுகள் நூல் அறிமுக விழாவுக்கு முன்னதாக கீழடி அகழாய்வு நடைபெறும் இடத்தையும், சமணர் மலையையும் பார்த்தேன். மனம் இது போதும் என்றளவுக்கு நிறைவாக இருந்தது. மதுரையை பற்றிய ஒரு எளிமையான அறிமுகத்தை இந்த நூல் வழங்குகிறது. இந்த நூலில், தாது வருட பஞ்சத்தின் போது மதுரை மக்களின் பசியைப் போக்கிய குஞ்சரத்தம்மாள் பற்றிய பகுதி போதும். இது ஒரு சிறந்த நூல் என சொல்வதற்கு.

தன்னுடைய சொத்தை எல்லாம் செலவழித்து கஞ்சி ஆக்கிய போது எழுந்த புகை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை தாண்டி உயர்ந்து நின்றது என்ற வரிகளுக்காகவே முத்துக்கிருஷ்ணனை கொண்டாடலாம். மேலும்
உலகத்தில் எங்கெல்லாம் ஒரு பெண் நல்லது செய்கிறாளோ அவர்கள் எல்லோருமே குஞ்சரத்தம்மாள் தான். குஞ்சரத்தம்மாள் கதையை படமாக எடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். அந்தக் கதை ஆஸ்கார் வாங்கும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.இதன் பின்னர், கீழடி அகழாய்வு பணிகளில் ஈடுபட்ட பெண்களையும், அ.முத்துக்கிருஷ்ணனின் தாயாரையும் பெருமைப்படுத்த விரும்புவதாக தெரிவித்த மிஷ்கின், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்வித்தார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement