மேடைக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். ஆனால் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ்த் திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோபோ சங்கர். இவருடைய தனித்துவமான உடல் மொழியும், மிமிக்ரி திறமையும் அவருக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
அதிலும் குறிப்பாக இவர் விஜயகாந்த், கமலஹாசன் போல பேசுவது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவ்வளவு துல்லியமாக நேர்த்தியாக பேசக்கூடிய ஆற்றல் ரோபோ சங்கருக்கு உண்டு. அவ்வளவு திறமையான கலைஞர்.
படையப்பா படத்தில் இடம் பெற்ற 'என் பேரு படையப்பா' என்ற பாடலில் நடனம் ஆடும் கலைஞராக அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும் தீபாவளி, மதுரை வீரன், கற்க கசட போன்ற படங்கள் அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தன.
அதன் பின்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன், மாரி, தேசிங்கு ராஜா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இறுதியாக சொட்ட சொட்ட நனையுது என்ற படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியாத பல பிரபலங்களும் தங்களுடன் அவர் இருந்த புகைப்படங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து ஆறுதலை தேடிக் கொண்டுள்ளனர். அதன்படி நாஞ்சில் விஜயன் ரோபோ சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.
Listen News!