தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக, ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை மாறியுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் இதுவரை திரையரங்குகளை அடையாமல் தாமதமாகி வருகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கும் சென்றுள்ள நிலையில், திரையுலகிலும் ரசிகர்களிடமும் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், இயக்குநர் மோகன் ஜி இந்த சென்சார் பிரச்சனை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில், ‘ஜனநாயகன்’ பட விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
அந்த பேட்டியில் மோகன் ஜி, “சென்சாருக்கு என்று தனி விதிமுறைகள் இருக்கிறது. தேதி அறிவித்து விட்டு சென்சாருக்கு படம் சொல்லக் கூடாது. ஒரு படத்திற்கு சான்றிதழ் வழங்க 60 நாட்கள் வரை சென்சார் போர்ட்டுக்கு கால அவகாசம் இருக்கிறது. இதை எல்லாம் சரியாக பின்பற்றி படம் வெளியாக தடை வந்து நீதிமன்றம் சென்றால் நீங்கள் ஜெயிச்சிடலாம். அந்த விதிகளை பின்பற்றாமல் நீங்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் சென்சார் போர்டு தான் ஜெயிக்கும்.” என்றார்.
மோகன் ஜியின் இந்த கருத்து, சினிமா துறையில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்த ஒரு முக்கிய விளக்கமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெரிய நடிகர்கள் நடித்த படங்களாக இருந்தாலும், சென்சார் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்பதையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!