இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ள “எல்ஐகே” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, க்ரித்தி ஷெட்டி மற்றும் சீமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கான இசையை அனிருத் அமைத்துள்ளார்.
கடந்த வாரம் பெரிய போட்டிப் படங்கள் இல்லாத நிலையில் வெளியான இந்த படம், நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை நிலவியது. இதற்கு முன்பு பிரதீப் நடித்த மூன்று படங்களும் தலா 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தன. அந்த நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை உருவாக்கினார்.
ஆனால் திரையரங்கில் படம் பார்த்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். கதை நல்லதாக இருந்தாலும் திரைக்கதை அமைப்பிலும் இயக்கத்திலும் விக்னேஷ் சிவன் தடுமாறிவிட்டார் என்பது பொதுவான கருத்தாக முன்வைக்கப்பட்டது. காட்சி அமைப்புகள் மட்டும் கண்களை கவர்ந்தன.

இந்த நிலையில், எல்ஐகே படத்தின் நான்காவது நாளில் வசூல் கணிசமாக குறைந்து, மொத்தமாக ரூ.3.44 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழில் ரூ.2.76 கோடியும், தெலுங்கில் ரூ.68 லட்சமும் இடம்பெற்றுள்ளன.
இதனால், வரும் நாட்களில் படத்தின் வசூல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து திரையுலகில் கவனம் செலுத்தப்படுகிறது.
Listen News!