மலையாளத்தில் பிரபல நடிகராகவும், பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் தமிழில் வெளியான வீர தீர சூரன் படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சுராஜ் வெஞ்சாரமூடு கவனம் செலுத்தி வருகின்றார். அதேபோல் தமிழ் சினிமாவிலும் இவருடைய நடிப்பைப் பார்த்து ரசிகர்கள், “சுராஜ் வெஞ்சாரமூடு ஒரு தனி வைப்தான்” என கூறினர்.
இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ஜெய்லர் 2 படத்திலும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவருடன் மோகன்லாலும் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

ஜெய்லர் படத்தின் முதல் பாகத்திலேயே மோகன்லால் வரும் காட்சிகள் செம மாஸாக காணப்பட்டது. ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் வசனமே இல்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்து ஸ்கோர் செய்தனர்.
தற்போது இதன் இரண்டாவது பாகத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்திருப்பதால், அவருக்கான மாஸ் காட்சிகளையும் நெல்சன் செதுக்கி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு கொடுத்த பேட்டியில், “ஜெய்லர் 2 படம் சூப்பராக வந்திருக்கிறது. முதல் பாகத்தோடு ஒப்பிடும்போது இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு சரியான படம் மூலம் தமிழ் சினிமாவில் இடம்பெற நான் காத்திருந்தேன். ‘வீர தீர சூரன் ’ கிடைத்ததில் சந்தோஷம். இப்போது யூத் , கர, ஜெய்லர் 2 என மூன்று படங்கள் செய்துள்ளேன்” என உற்சாகமாக பேட்டி அளித்துள்ளார்.
Listen News!