தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும். ஆனால், சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத சூழலும் இருந்து வந்தது.
அதன்படி, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் எனவும் பேசப்பட்டது. இப்படத்திற்காக சூர்யா மிகப்பெரிய உழைப்பை எடுத்திருந்தார். அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சமீப காலமாக ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க சூர்யா போராடி வந்த நிலையில், தற்போது அவரது நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் அந்த வெற்றியை எட்டியுள்ளது. இந்த படம் தற்போது தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல், வேலை நாட்களிலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு தொடர்ந்து வருவதால், ‘கருப்பு’ படம் ரூ.300 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி இயக்கிய இந்த படம் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ‘கருப்பு’ இடம்பிடிக்கும் என திரையுலக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் வெற்றி குறித்து பேசிய நடிகை ஜோதிகா, “கருப்பு திரைப்படத்திற்குக் கிடைத்த அன்பைக் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போயிருக்கிறோம். குறிப்பாக கடைசி 10 நிமிடங்களில் சூர்யா பிரமாதமாக நடித்திருக்கிறார். இந்த வெற்றியால் வீடே கொண்டாட்டமாக மாறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் கலந்து கொண்ட கொண்டாட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!