நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் நானே வருவேன். இப்படத்தினை இயக்குநர் செல்வதாகவன் இயக்கியிருந்ததோடு கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருந்தார். அத்தோடு தனுஷ் இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
மேலும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்று முதல் நாளில் இருந்தே பேச்சு அடிபட்டது. இருப்பினும் தயாரிப்பாளர் தாணு படத்தின் ரிலீசுக்கு பின் அளித்த பேட்டியில், படம் மாபெரும் கலெக்ஷன் செய்ததாக கூறினார்.
குறிப்பாக தஞ்சாவூரில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சொந்தமாக இரண்டு தியேட்டர்கள் இருப்பதாகவும், அதில் நானே வருவேன் படம் திரையிட்டதன் மூலம் தனக்கு ரூ.50 லட்சம் ஷேர் கிடைத்ததாக ஹாரிஸ் சொன்னதாகவும் கலைப்புலி தாணு அந்த பேட்டியில் கூறியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இப்படி அப்படத்தின் வசூல் குறித்து மாறுபட்ட கருத்து இருந்து வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், நானே வருவேன் படத்தின் வசூல் குறித்த உண்மை நிலவரத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : “நானே வருவேன் படம் ரொம்ப மந்தமாக வசூலித்தது உண்மைதான். இப்படத்தின் வசூல் குறித்து நான் ஆரம்பத்தில் பேசாததற்கு காரணம். பொன்னியின் செல்வன் படத்தோடு வந்ததால், ஒரு நான்கு நாட்களுக்கு பின் படம் பிக் அப் ஆகும் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி ஆகவில்லை. இப்போ எல்லா தியேட்டர்ல இருந்தும் படத்தை தூக்கிட்டாங்க.
ஒரு படம் நல்லா வசூல் செய்யவில்லை என்றாலும் நடிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் ஆகா ஓஹோனு சொல்லிவிடுகிறார்கள். தாணுவே தஞ்சாவூரில் 50 லட்சம் ரூபார் ஷேர் எடுத்ததாக ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னதாக சொன்னார். இதெல்லாம் கேட்கும்போது எங்களுக்கு ரொம்ப வேடிக்கையா இருக்கு.அப்படி ஒன்றிரண்டு தியேட்டரில் மட்டும் வசூலிக்க வாய்ப்பே இல்லை. மொத்தமா தஞ்சாவூர், திருச்சி சேர்த்தே அப்படம் 1 கோடி ரூபாய் தான் கலெக்ட் பண்ணியிருக்கும். அப்படி இருக்கும்பொழுது தஞ்சாவூர்ல மட்டும் 50 லட்சம் கலெக்ட் பண்ணதாக சொல்லி தமிழ் சினிமா மார்க்கெட்டையே கெடுக்கிறார். வசூலாகாத படத்தை பிரம்மாண்ட வசூல்னு சொல்லிடுறீங்க, அதனால் நடிகர்களும் சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள்.
ஒரு தயாரிப்பாளர் படம் வெற்றி பெற்றால் வெளிப்படையாக சொல்வதைப் போல் தோல்வி படங்களையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவரு என்னடான்னா மூணாவது நாளே செல்வராகவனுக்கு மாலையை போட்டு போட்டோ போடுறாரு. இதெல்லாம் பார்த்தா செல்வராகவன் என்ன நினைப்பாரு, படம் பயங்கரமா வசூல் செய்யுது போல, கர்ணன், அசுரன் ரேஞ்சுக்கு இருக்குதுனு நினைச்சிப்பாரு.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் திருச்சிற்றம்பலம் படத்துடைய 50 சதவீத வசூல் கூட இப்படத்துக்கு கிடைக்கவில்லை. தாணு இப்படி செய்வதெல்லாம் சினிமாவை பின்னோக்கி கொண்டு போவதற்கான செயல். உண்மையை விளம்பரப்படுத்துங்கள், தயவு செய்து பொய்யை விளம்பரப்படுத்தாதீங்க” என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
Listen News!