தமிழ் சினிமாவில் தனித்துவமான கருத்துகளுடன் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வரும் இயக்குநர் மோகன் ஜி, ‘திரௌபதி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘திரௌபதி 2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், இன்று (23.01.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘திரௌபதி’ திரைப்படத்தின் முதல் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ரிச்சர்ட் ரிஷி, சீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமூகப் பின்னணியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியாகும் போதே கடும் விவாதங்களை ஏற்படுத்தினாலும், வசூல் ரீதியாகவும் ரசிகர் ஆதரவு ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.
அந்த வெற்றியின் மூலம், இயக்குநர் மோகன் ஜி மீது மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், அதன் தொடர்ச்சியாக ‘திரௌபதி 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விடவும் பெரிய அளவில், வலுவான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
‘திரௌபதி 2’ திரைப்படத்தில்,ரக்ஷனா இந்து, ரிச்சர்ட் ரிஷி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் வரலாற்றுப் பின்னணியை ஒட்டிய கதை சொல்லல் ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சியை பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா பார்த்துள்ளார். அதன் பிறகு அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
அவர் அதன்போது, “இதனை ஒரு திரைப்படம் என்று சொல்வதை விட, வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நல்ல காவியம் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால், திருவண்ணாமலையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் இதுவரை இப்படிப்பட்ட கதைக்களம் வந்தது கிடையாது. அதற்காக முதலில் என் வாழ்த்துக்களை தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வீரமான கதைகளை நாம் வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம்.” என்று அவர் பாராட்டி பேசியுள்ளார்.
சௌமியாவின் இந்த பாராட்டு கருத்துகளால், ‘திரௌபதி 2’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை விடவும், இரண்டாம் பாகம் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
Listen News!