நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனது 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது. நட்சத்திர ஹோட்டலில் ஒரே மேடையில் அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தேர்தல் திமுக மற்றும் தவெகவுக்கிடையிலான நேரடி போட்டி என விஜய் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சி மிகுந்த தருணமும் இடம்பெற்றது. விஜயின் தனிப்பட்ட டிரைவர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனை விருகம்பாகத்தின் வேட்பாளராக அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கியது விஜயின் அரசியல் நடைமுறையை வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி முடிந்தபின், ஒவ்வொருவருடனும் விஜய் தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது சபரிநாதன், விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட தருணம் அங்கே இருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
சபரிநாதன் அழுததை பார்த்த விஜய், அவரது கண்ணீரை துடைத்து அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ராஜேந்திரன் மற்றும் சபரிநாதன் இருவரின் தோளிலும் கை போட்டு எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் தருணமாக பார்க்கப்படுகிறது.
Listen News!