ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தைத் தொடங்கிய பாவனா பாலகிருஷ்ணன், பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக உயர்ந்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘பீச் கேர்ல்ஸ்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அவர், விஜய் டிவியில் முழுநேர தொகுப்பாளராக பணியாற்றி ‘சூப்பர் சிங்கர்’, ‘ஜோடி நம்பர் ஒன்’ உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை திருமணம் செய்த பாவனா, அங்கேயே வசித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், தனது கணவரைப் பற்றிய உணர்ச்சிகரமான பகிர்வை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனது வேலை நேரம் நிலையானதாக இல்லாததால், விடுமுறை திட்டமிட கூட கணவர் பலமுறை முயற்சி செய்ததாக அவர் கூறினார். நண்பர்களைச் சந்திப்பதற்கும் கூட தானும் வருவேனா என்பதில் கடைசி நேரம் வரை உறுதி அளிக்க முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்துறையில் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிடும் கணவர், தனது பணியின் தன்மையை புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொண்டிருப்பது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். சில நேரங்களில் ஏமாற்றம் இருந்தாலும், அதை சிரித்தபடி சமாளித்து முன்னேறுவது தான் அவர்களின் உறவின் பலம் என பாவனா பகிர்ந்துள்ளார்.
Listen News!