தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படும் ஹரி, தனது அடுத்தப் படத்தை தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிப்பில் இயக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.
அதிரடி ஆக்ஷன் படங்களை தனித்துவமான வேகமான திரைக்கதை பாணியில் வழங்கி வந்த ஹரி இயக்கத்தில், சாமி, ஆறு, வேல், தாமிரபரணி, சிங்கம், பூஜை போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றவர். குறிப்பாக போலீஸ்–ஆக்ஷன் களத்தில் இவருடைய பாணி பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனால் கடைசியாக வெளியான விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஹரியின் அடுத்த திட்டங்கள் குறித்து திரையுலகில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இதற்கிடையில், ஹரி தனது முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தின் நாயகன் பிரசாத் உடன் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு கடந்த ஆண்டு பிரசாந்தின் பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

ஆனால், அந்த திட்டம் முன் தயாரிப்பு நிலையிலேயே திடீரென கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அதே கதையை நடிகர் அதர்வா உடன் மாற்றி அமைக்க ஹரி முயன்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஹரி தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் ஒரு புதிய கதையை விவரித்ததாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்ததால் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஹரி – ரவி தேஜா கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியின் ஆக்ஷன் பாணியும், ரவி தேஜாவின் மாஸ் நடிப்பும் இணைந்தால் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என திரையுலகில் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் முன் தயாரிப்பு கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கூட்டணி உறுதியாகுமானால், ஹரியின் கேரியரில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!