முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் தங்களது இரங்கல்களையும் உணர்ச்சிமிக்க கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரும் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதுகை மோனை கலந்த தனித்துவமான பேச்சு முறையாலும், நேரடியாக கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையாலும் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்பிடித்துள்ள டி.ராஜேந்தர், முள்ளிவாய்க்கால் தினம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், முள்ளிவாய்க்கால் என்பது தமிழினத்தின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய துக்க நாள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கு உயிரிழந்த ஈழத் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதோடு தற்போதைய அரசியல் சூழலையும் அவர் விமர்சித்துள்ளார். குறிப்பாக, ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்காத அரசியல் சக்திகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், அன்றைய நிகழ்வுகளை நினைக்கும் போது இன்னும் மனம் வலிப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட பதிவில்,
“முள்ளிவாய்க்கால் தினம் என்பது எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு துக்க தினம்.
எமது சொந்த இனத்தையே துடிதுடிக்க இழந்த நாள் அது. முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட எமது தொப்புள்கொடி உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தனி ஈழம் மலர வேண்டும் என்று நான் தினம் தினம் ஏங்குகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன், காங்கிரஸ் கரம் நீட்டுகிறது.
இதைப் பார்த்து இன்று திமுக கவலைப்படுகிறது. ஆனால், இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது?
அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கச் சிங்கள இராணுவத்திற்குத் துணையாக நின்று முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறினை ஓடவிட்டது யார்? அன்று எமது இனம் வேட்டையாடப்பட்ட போது எனக்கு எப்படித் துடித்திருக்கும்?
அன்று சிங்களவர்களோடு கூட்டு வைத்த காங்கிரஸ், இன்று திமுகவோடு கூட்டு வைத்து நேரம் பார்த்து வைத்தது வேட்டு.
இப்போது உங்களுக்கு வலிப்பது போல், அன்று ஈழத் தமிழர்கள் துடித்த போது எனக்கு வலித்தது.” என தெரிவித்துள்ளார்.
Listen News!