தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் தனித்த அடையாளம் உருவாக்கிய நடிகர்களில் முக்கியமானவர் சியான் விக்ரம். ஒரு கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கும் செல்லத் தயங்காத நடிகராக அவர் பார்க்கப்படுகிறார். உடல் எடையை குறைப்பது முதல், தோற்றத்தை முழுவதும் மாற்றுவது வரை கடுமையான அர்ப்பணிப்புடன் நடித்துள்ள விக்ரம், ரசிகர்களிடையே தனி மரியாதையை பெற்றவர்.
அதிலும் குறிப்பாக அன்னியன், ஐ, தங்கலான் போன்ற படங்களில் அவர் எடுத்த ரிஸ்க்குகள் தமிழ் சினிமாவில் பலராலும் பேசப்பட்டன. குறிப்பாக ‘ஐ’ மற்றும் ‘தங்கலான்’ படங்களுக்காக தனது உடலை கடுமையாக வருத்தி நடித்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.
ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றி பெறாததால், தற்போது விக்ரம் மீண்டும் ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் தற்போது தனது 63வது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த முழு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிகை ரியா ஷிபு கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், கேரள மாநிலம் மூணாருக்கு சென்றிருந்த விக்ரம், அங்கு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து உரையாடினார். அவரைக் கண்ட பெண்கள் பலரும் உற்சாகத்தில் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டதோடு, ‘அன்னியன்’ உள்ளிட்ட அவரது படங்களைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினர்.
அதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களுடன் இணைந்து அன்னியன் திரைப்படத்தில் இடம்பெற்ற “அண்டங்காக்கா கொண்டக்காரி” பாடலை பாடி விக்ரம் மகிழ்ந்தார். சாதாரண மனிதரைப் போல அனைவருடனும் கலந்துகொண்ட விக்ரமின் இந்த எளிமையான நடத்தை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் “இதுதான் உண்மையான ஸ்டார்”, “சியான் எப்போதும் வித்தியாசம்” என பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
Listen News!