தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி, தொடர்ச்சியாக திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் பிற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு கையில் விரல் முறிவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடித்துவரும் ‘பத்தா’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் படப்பிடிப்பின் ஒரு காட்சியை படமாக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினால், கைவிரலில் காயம் ஏற்பட்டதாக விஜய் சேதுபதி கூறினார்.
இதையடுத்து மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளதாகவும், காயத்தின் தன்மையை பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்த 8 வாரங்களுக்கு கை விரலில் கட்டு அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காயம் பெரிதாக கவலைக்கிடமானது அல்ல என்றும், தற்போது உடல்நலம் சீராக உள்ளதாகவும் நடிகர் விளக்கம் அளித்தார். இருப்பினும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழுமையான ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.
விஜய் சேதுபதி தொடர்ந்து பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருவதால், அவரது படப்பிடிப்பு அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பு குழுவினருடன் ஆலோசித்து படப்பிடிப்புகள் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி வெளியாகியதையடுத்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் சேதுபதி விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!