தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. இவருடைய பாடல்கள் இன்றும் தனித்துவமாக காணப்படுகின்றன.
இந்த நிலையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, 1976 முதல் 2000 வரை காலப்பகுதியில் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 134 படங்களின் பாடல்களை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரிகமா நிறுவனத்தின் மனுவை விசாரித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா, தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் ஒலிப்பதிவு உரிமைகளை சில ஆடியோ நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கியிருந்தார்.

அந்த ஒப்பந்த காலம் முடிந்ததும், உரிமைகள் தன்னிடம் திரும்பும் என்ற அடிப்படையில், 134 திரைப்படங்களின் பாடல்களை பிற இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து சரிகமா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை பாடல்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு இளையராஜா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தன் பாடல்களைத் தானே பயன்படுத்த முடியாதா?” என சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, அனுமதி இல்லாமல் தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டால் கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கும் இளையராஜாவுக்கே இப்போது இத்தகைய தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!