தமிழகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், முதலமைச்சராக நேற்று பிரமாண்டமாக பதவியேற்றது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் இருந்து வந்த ஒரு சோகச் செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, 31 வயதான இளம் நடிகர் பரத் காந்த் மற்றும் அவரது நண்பரும் ஒளிப்பதிவாளருமான சாய் த்ரிலோக், ஹைதராபாத்தில் நடைபெற்ற கோர சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘Tenant’, ‘Gramam’ போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும், ‘மேரேஜ் பேச்லர்’, ‘மச்சினிச்சி வந்த நேரம்’, ‘ஆட்டோ லவ்’ உள்ளிட்ட பல குறும்படங்களிலும் நடித்திருந்த பரத் காந்த், வளர்ந்து வரும் இளம் நடிகராக ரசிகர்களிடையே கவனம் பெற்றிருந்தார்.
நேற்று (மே 10) இரவு, ஆதிபாட்லா அருகே உள்ள வெளிவட்டச் சாலையில், நண்பரான சாய் த்ரிலோக்குடன் காரில் பயணம் செய்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது பயணித்த கார் மோதிய வேகம் அதிகமாக இருந்ததால் லாரியின் பின்சக்கரங்கள் கூட கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் சேதமடைந்ததுடன், பரத் காந்த் மற்றும் சாய் த்ரிலோக் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நடிகராக மட்டுமல்லாமல் திறமையான நடனக் கலைஞராகவும் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த பரத் காந்தை இன்ஸ்டாகிராமில் சுமார் 40 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தனர்.
அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், தாய்லாந்தின் பாங்காக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அவர் பதிவிட்ட கருத்து ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. தற்போது அந்த பதிவு மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒருபுறம் விஜயின் பதவியேற்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், மறுபுறம் இளம் நடிகர் பரத் காந்தின் திடீர் மரணம் திரையுலக ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!