இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் ஐஸ்வர்யா ராய் பச்சன், பாலிவுட்டில் பிரபலமாகும் முன்பே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். குறிப்பாக இருவர் மற்றும் ஜீன்ஸ் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் அளித்த பழைய நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், தமிழ் சினிமாவில் தனது ஆரம்ப கால அனுபவங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் நடித்த காலத்தை நினைவுகூர்ந்த அவர், “நான் மும்பையிலிருந்து வந்த பெண் என்ற உணர்வை யாரும் எனக்கு தரவில்லை. முதல் நாளிலிருந்தே அனைவரும் மிகவும் அன்பாக பழகினார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி சரியாக தெரியாத நிலையிலும், படக்குழுவினர் கொடுத்த ஆதரவும் நம்பிக்கையும் தான் நீண்ட வசனங்களையும் கடினமான காட்சிகளையும் எளிதாக செய்ய உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இயக்குனர் எஸ். சங்கர் மற்றும் ‘ஜீன்ஸ்’ படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். “தமிழில் என்னை மிகவும் வசதியாக உணர வைத்தது அந்த குழுவே. அந்த படம் எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டு வெளியான ‘ஜீன்ஸ்’ திரைப்படம் அப்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக அமைந்ததுடன், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அந்த படம் ஆஸ்கர் விருதிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரைப் படமாகவும் தேர்வானது.
பல ஆண்டுகள் கழித்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பினார். இதில் அவர் நடித்த நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!