நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதலை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், வழக்கமான ரொமான்டிக் கதையாக இருந்தாலும், அதன் உருவாக்கம் மற்றும் அணுகுமுறையில் சிறு வித்தியாசத்தை முயற்சித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், படத்தின் முழு திரை விமர்சனத்தை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சென்னையில் தனியாக வசித்து வரும் நாயகன் சதயசீலன் (அபிஷன் ஜீவிந்த்), குடும்பத்தினரின் வற்புறுத்தலால் திருமண வரனுக்காக ஒரு பெண்ணைச் சந்திக்கச் செல்கிறார். அந்த சந்திப்பு ஒரு சாதாரண arranged marriage மீட்டிங்காக ஆரம்பித்தாலும், அங்கு காத்திருக்கும் நாயகி அனஸ்வரா (அனஸ்வரா ராஜன்) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடத் தொடங்கியதும், கதை வேறு திசையில் பயணிக்கிறது.
உரையாடலின் போது, இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. பள்ளிக் கால நினைவுகள், நண்பர்கள், ஆசிரியர்கள் என பழைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அந்த தருணம், இருவருக்கும் இடையேயான இடைவெளியை மெதுவாகக் குறைக்கிறது. மேலும், பள்ளிக் காலத்தில் இருவருக்கும் இருந்த வேறு வேறு ஒருதலைக் காதல் அனுபவங்கள் குறித்த உரையாடல் கதைக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
ஒருகட்டத்தில், நாயகி அனஸ்வரா, “நாம் திரும்ப நம்ம பள்ளிக் கால காதலர்களை நேரில் சந்தித்து, அவரவர் காதலை வெளிப்படையாகச் சொல்வோமா?” என்று கூறுகிறார். அந்த யோசனை நாயகனுக்கும் பிடிக்க, இருவரும் தங்கள் கடந்தகால காதலை சந்திக்கப் புறப்படுகிறார்கள்.
அவர்கள் உண்மையிலேயே அந்த பள்ளிக் கால காதலர்களை சந்தித்தார்களா? அந்த சந்திப்புகள் அவர்களின் மனதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? இறுதியில், நாயகன் மற்றும் நாயகி ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள்? என்பதே ‘வித் லவ்’ திரைப்படத்தின் மையக் கதை.
இப்படம், சாதாரண காதல் கதையாக இருந்தாலும், உருவாக்கத்தில் இந்த படம் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. குறிப்பாக, கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் விதம் மற்றும் உரையாடல்களின் இயல்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. சில காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. நாயகன் – நாயகி இடையேயான உரையாடல்கள் இயல்பாக அமைந்துள்ளது படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.
அபிஷன் ஜீவிந்த் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான மிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். அதேபோல், அனஸ்வரா ராஜன் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். குறிப்பாக, பள்ளிக் கால நினைவுகளை பேசும் காட்சிகளில் அவரின் முகபாவனைகள் பாராட்டுக்குரியவை.
Listen News!