நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தீவிரமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இந்தப் படம், அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த முறை இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. நயன்தாராவுடன் சினேகா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுமார் 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் பின்னணி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், குறிப்பாக கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை மேலும் தரமாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், எதிர்பார்த்ததை விட கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக 'மூக்குத்தி அம்மன் 2' இந்த ஆண்டுக்குப் பதிலாக அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எனினும், படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், நயன்தாரா ரசிகர்கள் அடுத்த அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!