தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் வரலட்சுமி சரத்குமார். முன்னணி நடிகர் சரத்குமார் அவர்களின் மகளான அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

இவர், நாயகியாக மட்டுமல்லாமல், வில்லி மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நேர்மையான பேச்சு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதாலும் அடிக்கடி பேசப்படுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது வரலட்சுமி மிகவும் நேர்மையாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். “காசு இல்லாமல் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள்? முதலில் உங்கள் நிதி நிலையை திட்டமிட்டு விட்டு அதன் பிறகு தான் குழந்தைகள் பற்றி யோசிக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது பேச்சில், குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது எளிதான விஷயம் என்றாலும், அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பது தான் மிகப் பெரிய பொறுப்பு என்றும் குறிப்பிட்டார். “குழந்தைகள் பெற்றுக்கொள்வது சுலபம். ஆனால் அந்த குழந்தைகளை சரியாக வளர்த்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்க வேண்டும். இன்றைய காலத்தில் பொருளாதார நிலைமை எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் நிதி திட்டமிடல் இல்லாமல் குழந்தைகளை பெற்றுக்கொண்டு பின்னர் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். “குழந்தை பெற்றுக்கொண்டு கஷ்டப்படுகிறோம் என்று பின்னர் வருந்துகிறார்கள். அந்த குழந்தைகள் சில நேரங்களில் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அது மிகவும் வருத்தமான விஷயம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் தாம் குழந்தைகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் வரலட்சுமி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன. சிலர் அவரது கருத்தை ஆதரித்து வருகின்றனர்.
Listen News!