பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரொம்பவே பிரபலமானார் மீரா மிதுன்.இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறியதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.
மாடலிங் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த மீரா மிதுன், '8 தோட்டாக்கள்' விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் 'தானா சேர்ந்தக் கூட்டம்' ஆகிய சில படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமான அவர், அதே வேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கினார். அத்தோடு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துடன் வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். இதனால் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இருவரையும் கைது செய்தனர்.இதன் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். மேலும், இந்த வழக்கில் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஷாம் அபிஷேக் மட்டுமே ஆஜாரானார். முக்கிய குற்றவாளியான மீரா மீதுன் தலைமறைவானார். எனவே மீரா மிதுனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.
இவ்வாறுஇருக்கையில் இந்த வழக்கு 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு ஆகஸ்ட் 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவார் எனவும் அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் செப் 28ம் தேதியும் விசாரணைக்கு வந்தது,
எனினும் அப்போது மீரா மிதுன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். தொலைபேசி எண்ணையும் மாற்றி வருகிறார். போலீஸார் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சொல்லப்பட்டது. அப்போது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் , இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை எனவும், அதேநேரம் தொடர்ந்து மீரா மிதுனின் குடும்பத்தினரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Listen News!