தொகுப்பாளராக தனது கலைப் பயணத்தை தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரசிகர்களின் வாழ்த்துச் செய்திகள் நிரம்பியுள்ளன.

சின்னத்திரையில் தொகுப்பாளராக துவங்கிய சிவகார்த்திகேயன், தனது நகைச்சுவை உணர்வு, எளிமையான பேச்சு நடை மற்றும் இயல்பான நடிப்பால் விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் இன்று முன்னணி ஹீரோவாக திகழ்கிறார். குடும்பம் முழுவதும் ரசிக்கும் நடிகராக உருவெடுத்துள்ள அவர், இளைஞர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இன்று தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வந்த அவர், அமைதியாக தரிசனம் செய்து வழிபட்டார்.

திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் பலரும் அவரை பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலர் அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். இந்த கோயில் தரிசன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Listen News!