மலையாள திரையுலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மற்றும் நடிகர் நிவின் பாலி இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரின் திரைப்பயணத்திலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்திய மெகா ஹிட் படமாக மாறியது.

அதன்பிறகு இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். தற்போது சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது. மேலும், இது நிவின் பாலியின் 50-வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு வெளியீட்டு விழா வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. சமீபத்தில் வெளியான 'கோல்டு' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மீண்டும் இயக்குநராக அல்போன்ஸ் புத்ரன் களமிறங்கியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை உருவாக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Listen News!