தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யா, சமீபத்தில் வெளியான “கருப்பு” திரைப்படத்தின் வெற்றியால் மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் தனது மாஸ் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த திரைப்படம், சூர்யாவின் 46-வது படமாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படம், குடும்ப உணர்வுகளும், வித்தியாசமான காதல் பின்னணியும் கலந்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா, செல்வாக்கும் செழிப்பும் கொண்ட தொழிலதிபராக நடித்துள்ளார். ஆனால் வழக்கமான காதல் கதைகளைப் போல இல்லாமல், தன்னைவிட 20 வயது இளைய பெண்ணின் காதலை ஏற்க தயங்கும் ஒருவரின் மனநிலையை மையமாக வைத்து கதை நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கதைக்களம் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், நடிகைகளான ராதிகா மற்றும் ரவீனா தண்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வெளியான படத்தின் அறிமுக போஸ்டர்கள் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக சூர்யாவின் புதிய லுக் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், சூர்யாவின் மார்க்கெட் தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படத்திற்கும் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
Listen News!