இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ சமீபத்தில் வெளியாகி, வசூல் மற்றும் வரவேற்பு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘துரந்தர்’ பிராண்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஒரு புதிய திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட கூடுதல் காட்சிகளை இணைத்து, வெப் சீரிஸ் வடிவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 20 எபிசோடுகளுடன் உருவாகவுள்ள இந்த தொடரில், இதுவரை வெளியிடப்படாத சுமார் இரண்டரை மணி நேர காட்சிகளும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் திரைப்படங்களில் முழுமையாக சொல்லப்படாத கதையின் பல புதிய கோணங்கள், கதாபாத்திரங்களின் பின்னணி, மேலும் விரிவான நிகழ்வுகள் ஆகியவை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, ரசிகர்களுக்கு ‘துரந்தர்’ உலகத்தை இன்னும் ஆழமாக அனுபவிக்க வாய்ப்பு அளிக்கும். குறிப்பாக, திரையரங்கில் தவறவிட்ட சில முக்கிய காட்சிகளை இந்த வெப் சீரிஸ் மூலம் காண முடியும் என்பதால், ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
Listen News!