இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’, இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனைத் தவிர, நடிகை ஸ்ரீலீலா, நடிகர்கள் ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு தலைமுறை நடிகர்களை ஒரே திரையில் இணைத்துள்ள இந்த படம், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக பார்க்கப்படுகிறது.

‘பராசக்தி’ திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோக்கள் இன்று அதிகாலை முதலே தொடங்கியுள்ளன. பல நகரங்களில் ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளுக்கு வந்து படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். தியேட்டர்களில் விசில், கைதட்டல், கொண்டாட்டம் என ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக காணப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில், படத்தின் முதல் பாதி, திரைக்கதை, வசனங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பை பாராட்டும் பதிவுகள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ் மொழி, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் கருத்துகள் தொடர்பான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதில் அவர், “நீண்ட காலத்துக்குப் பிறகு நமது தாய்மொழியைப் போற்றியும், உயர்த்தியும் பேசும் திரைப்படம். தமிழ் மீது கொண்ட பேரன்புடன் உங்களுக்காக ‘பராசக்தி’. இது என் 100-வது திரைப்படம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் இந்த பதிவு, தமிழ் ரசிகர்களிடையே உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது வார்த்தைகளை பகிர்ந்து, படத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இது அவரது 100-வது திரைப்படம் என்பதால், ‘பராசக்தி’ அவருடைய இசைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
Listen News!