இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், மாரி செல்வராஜ் திடீரென ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தனுஷை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதன்படி, தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் கைவிடப்படவில்லை என்றும், திட்டமிட்டபடியே படம் முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் மாரி செல்வராஜ், அதனைத் தொடர்ந்து தனுஷ் படத்திற்கான பணிகளை முழுவீச்சில் தொடங்கவுள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘கர்ணன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பிற முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!