தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் “ஜனநாயகன்”. இந்தப் படம் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது.

குறிப்பாக, அரசியல் சார்ந்த கதைக்களம், ஹெச். வினோத்தின் நேர்த்தியான மேக்கிங், மற்றும் விஜயின் மாஸ் திரைத் தோற்றம் ஆகியவை இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
“ஜனநாயகன்” திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால், எதிர்பாராத வகையில் சென்சார் சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தின் உள்ளடக்கம் தொடர்பான சில விஷயங்களில் சென்சார் போர்டு கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அதனால் படம் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, படம் வெளியாகாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், “ஜனநாயகன்” படம் குறித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் இந்த படத்தின் வெளியீடு தாமதம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது அவர், “சூடா சாப்பிட்டால் தான் அது பிரியாணி. இரண்டு மாதம் கழிச்சு சாப்பிடுறது பிரியாணி இல்ல… ஜனநாயகன் படம் இப்படி வெளியாகாம இருப்பது ரொம்ப பெரிய வேதனை.” என்று தெரிவித்தார்.
மன்சூர் அலிகானின் இந்த கருத்துகள் விஜய் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அத்துடன், தற்போது வரை படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!