தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படங்களில் ஒன்றாக நடிகர் தனுஷ் நடித்து வரும் அவரது 55-வது திரைப்படம் மாறியுள்ளது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். மேலும், இப்படத்தை தனுஷ் தானே தயாரித்து வருவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் அவர் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கதாநாயகிகளாக சாய்பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்துள்ளனர்.
இப்படத்தில் தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுவதால், இது ஒரு ஸ்பை த்ரில்லர் கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த படத்தை இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாக திரைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘சேயோன்’ திரைப்படமும் அதே காலகட்டத்தில் வெளியாகலாம் என கூறப்படுவதால், பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!