தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றுதான் பருத்திவீரன். இந்த படம் மதுரை சுற்று வட்டார கிராம மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. அதற்கு அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடல்களும் பங்காற்றியது.
தென் மாவட்ட திருவிழாக்களில் இன்றும் தவறாமல் இடம்பிடிக்கும் பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற பாடல்களை பாடியவர் லட்சுமி பாட்டி. அவர் அந்தப் பாடலை பாடியதோடு மட்டுமில்லாமல் அதில் நடித்ததன் காரணமாக பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
மதுரையில் பிறந்த லட்சுமி பிறந்ததிலிருந்து நாட்டுப்புற பாடல்களை தனது அம்மாவிடம் கற்று, கோவில் திருவிழாக்களில் பாடி வந்துள்ளார். ஒருமுறை மதுரையில் பாடிய போது இயக்குனர் அமீர் தன்னை அழைத்து படத்தில் பாட வைத்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த படத்தின் மூலமாகத்தான் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பின்பு கோவில் திருவிழாக்களில் அவருக்கு அமோக வரவேற்பும் காணப்பட்டது. கடந்த சில வருடங்களாகவே வயது முதிர்வின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் வெளியில் செல்லாமல் முடங்கி இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தன்னுடைய 75 வது வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் லட்சுமி பாட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்ற பிள்ளைகள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் கிடைக்கவில்லை என அரசாங்கத்திடம் உதவியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!