தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’. அந்த மாபெரும் ஹிட் படம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களின் பேராதரவுடன் இன்னொரு வெற்றி சாதனையை பதிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 12, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்தாக ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த படம், வெளியான காலகட்டத்தில் மட்டும் அல்லாமல், இன்றும் ரசிகர்களின் மனதில் அதே அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கிளாசிக் திரைப்படமாக உள்ளது.
‘படையப்பா’ ரீ-ரிலீஸ் ஆன பிறகு தொடர்ந்து 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. பொதுவாக, ரீ-ரிலீஸ் படங்கள் சில நாட்களிலேயே திரையரங்குகளை விட்டு வெளியேறி விடும். ஆனால், ஹவுஸ் ஃபுல் காட்சிகள், ரசிகர்களின் விசில், கைதட்டல் என்று ‘படையப்பா’ படம் மீண்டும் புதிய தலைமுறை ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்திருந்தது.

குறிப்பாக, ரம்யா கிருஷ்ணனின் ‘நீலாம்பரி’ கதாபாத்திரம், தமிழ் சினிமாவின் சிறந்த வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது. அதேபோல், ரஜினிகாந்தின் ஸ்டைல், வசன உச்சரிப்பு, கெட்டப் மாற்றங்கள் ஆகியவை இன்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன.
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “25 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘படையப்பா’ திரைப்படத்தை திரையரங்குகளில் ஓட வைத்து, மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!