இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகி வரும் 'ராமாயணம்', ஒவ்வொரு புதிய அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், மண்டோதரி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
ஏற்கனவே வெளியான கிளிம்ஸ் காட்சியில், மாபெரும் விஎஃப்எக்ஸ் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான காட்சிப்பதிவு, பின்னணி இசை மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றம் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக, ரன்பீர் கபூரின் ராமர் தோற்றமும், யஷின் ராவணன் அவதாரமும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டன.
இந்த நிலையில், ராமாயணம் படத்தில் மண்டோதரியாக நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால், ராமாயணம் குறித்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் கூறுகையில், ராமாயணம் திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத தரத்தில் உருவாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகவே இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். நடிகர்களாகிய எங்களுக்கும் புதிய உலகத்திற்குள் பயணிப்பது போன்ற உணர்வை இந்த படம் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு இப்படியான அனுபவத்தை நான் சந்தித்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பின்னணி பணிகள் மற்றும் காட்சி அமைப்புகளுக்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இதிகாசத்தை உலகத் தரத்தில் திரையில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், காட்சியமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நட்சத்திர பட்டாளம் என அனைத்து அம்சங்களிலும் புதிய சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே நிலவுகிறது.
கிளிம்ஸ் வீடியோ மட்டுமே இத்தனை வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், முழு திரைப்படம் வெளியாகும் போது இந்திய சினிமாவில் புதிய வசூல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு படைக்குமா என்ற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Listen News!