விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் தாமரைச்செல்வி. இவர் தன்னுடைய இயல்பான பேச்சாலும் தைரியத்தாலும் பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்ன மருமகள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வந்தார். ஆனாலும் திடீரென அவர் சீரியலில் இருந்து விலகினார். அதற்குப் பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “துரோகத்தை என்னால் தாங்க முடியவில்லை. நான் மன உளைச்சலில் இருக்கிறேன். இந்த காலத்தில் யாரை நம்புவது என்று தெரியவில்லை” என்று புலம்பி இருந்தார்.
இந்த நிலையில், சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலகியது குறித்து தாமரைச்செல்வி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் கொடுத்த ஆதரவால் 90 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன். அதற்குப் பிறகு விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதே நேரத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தேன். ஒருநாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு தேதி கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக என்னை தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை போட்டுவிட்டார்கள். அது எனக்கு வருத்தமாக இருந்தது. இப்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். ‘ஆழி’ படத்தில் வையாபுரியின் மனைவியாக நடித்திருக்கிறேன்.
மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான கில்லாடி ஜோடி நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தேன். அதில் மலையேற வேண்டும், கடலில் குதிக்க வேண்டும் என பல கண்டிஷன்கள் போட்டார்கள். நானும் என் கணவரும் அதற்கு தயார் என்று சொன்னோம். ஆனால் பிறகு அழைக்கிறோம் என்றார்கள். இதனால் என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என தனது வேதனையை தெரிவித்துள்ளார் தாமரைச்செல்வி.
Listen News!