• Jun 06 2025

மாஸாக களமிறங்கிய கமல்.. மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியானதா.? வெளியான திரைவிமர்சனம் இதோ.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகர் கமல்ஹாசன், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைக்கு தாதா வேடத்தில் களமிறங்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


டெல்லியை தளமாகக் கொண்ட கதை, கமல்ஹாசன் மற்றும் மகேஷ் மஞ்சரேக்கர் ஆகிய இரு தாதாக்களுக்கிடையே தொடரும் மோதல்களுடன் ஆரம்பிக்கிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல் மேல் நடத்தப்படும் கொலை முயற்சியில் இருந்து, சிறுவனான சிம்புவின் உதவியுடன் கமல் தப்பிக்கின்றார். அந்த நாள் முதல் சிம்பு, கமலுடன் வளர்கிறார். கமல்ஹாசன் தனது பதவிக்குப் பின், சிம்புவைத் தான் அடுத்த தலைமுறையாக்க விரும்புகிறார்.

ஆனால் கதை திருப்பம் எடுக்கும் போது, சிம்புவின் மீது கமல் சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறார். சுற்றியுள்ளவர்கள் இந்த சந்தேகத்தை மேலும் தூண்டும் வகையில் சிம்புவை கமலுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். இப்படி முன்னாள் பாச உறவுகள், பின்னால் வில்லத் திட்டங்கள் ஈடுபடுவதால் உருவாகும் விரோதங்கள், கலக்கம், துரோகம் என்பவற்றின் சுழலில் படம் நகர்கிறது.


தாதாவாக வரும் கமல், உடல் மொழியில் மற்றும் பேச்சில் காட்டும் ஹீரோயிசம் வேற லெவல். “நாயகன்” படத்துக்குப் பிறகு மீண்டும் அவர் இப்படியொரு தாதா வேடத்தில் இளமையுடன் திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. சில காட்சிகளில் அவர் குறும்புடன் வரும் காதல் சீன்களும், சண்டைக் காட்சிகளில் காட்டும் ஆவேசமும், திரைக்கு ஒரு விறுவிறுப்பைச் சேர்க்கின்றது.

சிம்பு, இந்தக் கதையில் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் கலக்குகின்றார். ஆரம்பத்தில் தாதா கமலின் உண்மையான விசுவாசியாக வளர்ந்தாலும், ஒரு கட்டத்தில் அவர் மாற்றம் அடைவது, படம் முழுக்க ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறது. கமலுடன் உள்ள சிம்புவின் காட்சிகள் அனைத்தும் நெருக்கமான உரையாடல்கள், தாக்கம் நிறைந்த close-up காட்சிகளால் பயமுறுத்துகின்றன.


த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் காணப்படுகின்றது. அபிராமி குடும்ப பெண்ணாக இருந்து இரண்டாம் பாதியில் ரசிகர்களை கலங்கடிக்க வைக்கும் வகையில் நடித்திருப்பது பலரையும் கைதட்டவைக்கும் அளவுக்கு அமைந்திருக்கின்றது. நாசர், ஜோஜூ ஜார்ஜ், சஞ்சனா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பால் கதையை உயர்த்துகிறார்கள். நாசரின் வில்லத்தனமும், ஜோஜூவின் மிரட்டலான நடிப்பும், பொலீஸ் அதிகாரியாக அசோக் செல்வனின் அமைதியான நடிப்பும் சிறந்த பாராட்டுக்குரியவை.

அந்தவகையில், தக் லைஃப் ஒரு கிளாசிக்கான காம்பினேஷனாக அமைந்துள்ளது. வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும், கமலின் ஆளுமை, மன அழுத்தங்களின் சித்திரம், பிரச்சனைகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து உணர்ச்சிப் பெருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


Advertisement

Advertisement