இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக கருத்துகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே அதிக கவனம் பெற்றுள்ளது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார். அவரின் இசை ஏற்கனவே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று அதன் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவின் போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விழாவில் உரையாற்றிய ஜி.வி. பிரகாஷ்,“பராசக்தி படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை நாங்கள் ஒளித்து வைத்துள்ளோம். அதை பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறோம். படம் வெளியாகும் போது அது உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும்” என்று கூறினார்.
ஜி.வி. பிரகாஷின் இந்த கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. “அந்த முக்கிய சர்ப்ரைஸ் என்ன?” என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சிலர் இது கதைக்குள் வரும் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கலாம் என்றும், சிலர் ஒரு சிறப்பு தோற்றம் அல்லது எதிர்பாராத கேரக்டர் எனவும் யூகித்து வருகின்றனர்.
Listen News!