மோகன்லாலுடன் இணைந்து மீனா ஜோடியாக நடித்த ஒரு திரைப்படமே 'திரிஷ்யம்'. இது ஒரு மலையாள படம் ஆகும். இப்படமானது ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-இல் திரைக்கு வந்து ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி இருந்தது.
மேலும் இந்தப் படமானது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியானது. அதுமட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன எனப் பல மொழிகளிலும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பை பெற்றது. இவ்வாறாக திரிஷ்யம் படத்தின் முதல் இரு பாகங்களும் வெளியானதை தொடர்ந்து 'திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் பல நாளாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனியும் "திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தான் டைரக்டர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ''திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கான கிளைமாக்ஸ் என்னிடம் உள்ளது. அதை வைத்து மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படம் விரைவில் தயாராகும்" என்று கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் மிகுந்த குஷியில் உள்ளனராம்.
Listen News!