ஐபிஎல் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது என்றால் அது நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது இந்த அணி. CSK-விற்கு இந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதற்கு காரணம் அந்த அணி செய்த சாதனைகளும் அதனை தோனி வழிநடத்திய விதமும் தான்.
இப்படி புகழ்பெற்ற அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதாரண மக்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத்தும் CSK அணியின் உடைய வெறித்தனமான ரசிகர் ஆவார்.
CSK அணியின் தீவிர ரசிகராக இருந்தும் அவர் அந்த அணிக்காக எந்த ஒரு பாடலையோ அல்லது தீம் மியூசிக்கோ போட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கான காரணம் குறித்து அனிருத் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார்.
அதாவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது அனிருத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகவில்லை. ஆனால் அந்த சமயத்தில் CSK அணிக்காக சுயாதீன இசைக்கலைஞர்கள் இசையமைத்த 'விசில் போடு..' என்ற தீம் பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி, பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி இருந்தது.
பின்னர் CSK அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் 2018-இல் மீண்டும் கம்பேக் கொடுத்து கெத்தாக கோப்பையையும் தட்டித்தூக்கி சாம்பியன் ஆனது. அந்த சமயத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அனிருத்தை சந்தித்து, CSK-விற்காக தீம் மியூசிக் போட்டுக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் நம்ம அனிருத் அவர்களிடம் முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். என்னடா இது... CSK-வின் தீவிர ரசிகனாக இருந்தும் அவர் இப்படி சொல்லிட்டாரே என நிர்வாகிகள் பலரும் ஷாக் ஆனதோடு அவர் இசையமைக்க மறுப்பதற்கான காரணத்தை அனிருத்திடம் கேட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது அதற்கு அவர் சொன்ன காரணத்தை கேட்டும் அவர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
அனிருத் கூறுகையில் "முன்னதாக CSK-விற்காக சுயாதீன இசைக் கலைஞர்கள் இசையமைத்து விசில் போடு பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த பாடல் உருவாக்கிய ஒரு மேஜிக்கை என்னால் மீண்டும் கொண்டுவர முடியாது. நான் CSK மேட்ச் பார்க்கும்போதே தல தோனி சிக்சர் அடிக்கும் போதெல்லாம் விசில் போடு பாடலை போடுவார்கள், அப்போது எனக்கே புல்லரிக்கும்.
நான் என்ன ஒரு பாடலோ, தீம் மியூசிக்கோ போட்டாலும் என்னால் அதனை நிச்சயம் பீட் பண்ணவே முடியாது. ஏனென்றால் அது ஏற்படுத்திய தாக்கம் வேறலெவல். எப்படி சூப்பர்ஸ்டார் மியூசிக் என்றால் அண்ணாமலை படத்தின் ஓப்பனிங் இசை ஞயாபகத்து வருகிறதோ, அதேபோல் CSK என்று சொன்னால் விசில் போடு தான். இதனால் தான் நான் தீம் மியூசிக் போடவில்லை" எனத் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தும் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும், அவர்களின் பாடலுக்கும் மதிப்பு கொடுத்து அனிருத் செய்த இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!