இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனது 10ஆவது திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், அந்தப் படம் குறித்த அவரது உணர்ச்சிபூர்வமான பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இளையராஜாவின் 1540வது திரைப்படமாகும் என்பதும், அவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 51 ஆண்டுகள் கடந்துள்ளதும் இந்தக் கூட்டணியை இன்னும் சிறப்பாக்கியுள்ளது.

தனது சமூக வலைத்தள பதிவில் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படம் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான கதை என்று குறிப்பிட்டுள்ளார். “மகான்” படத்திற்குப் பிறகே இந்தக் கதையை இயக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் என்றும், ஆனால் ஒவ்வொரு கதைக்கும் அதைச் சொல்ல வேண்டிய சரியான நேரம் இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் காத்திருந்த இந்தக் கதை தற்போது சரியான மனிதர்களின் கூட்டணியுடன் திரைப்படமாக உருவாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தயாரிப்பாளர்களான குனீத் மோங்கா மற்றும் அசின் ஜெயின் ஆகியோர் தனது பார்வையை முழுமையாக புரிந்துகொண்டதாகவும், தன்னுடைய கனவை அவர்கள் தங்களுடைய கனவாக மாற்றியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோல், இளையராஜா குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், “என் வாழ்க்கையின் ஒவ்வொரு உணர்வும் ராஜா சாரின் இசையோடு இணைந்திருக்கிறது. மகிழ்ச்சி முதல் சோகம் வரை எல்லா தருணங்களிலும் அவரது இசை இருந்துள்ளது. அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, ஒரு வாழ்வியல் முறை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
About my 10th Dream......❤️
Maestro @ilaiyaraaja Sir 🙏@guneetm @Achin1087 #JyotiDeshpande@sikhyaent @jiostudios #DhammamFilms#Dream10Blessing1540#KS10Maestro1540https://t.co/Gs2QxEH1od pic.twitter.com/3MU0g19ViA
Listen News!