• Jun 08 2026

மாஸ் ஜாதராவுக்கு பிறகு ரூட்டை மாற்றினாரா ரவி தேஜா.? கவனம் ஈர்க்கும் இருமுடி போஸ்டர்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என்று கொண்டாடப்படும் ரவி தேஜா, தனது அடுத்த திரைப்படமான ‘இருமுடி’ மூலம் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறார். 

ஆக்‌ஷன், காமெடி மற்றும் மாஸ் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், இந்த முறை ஆன்மிகம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘மாஸ் ஜாதரா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ரவி தேஜாவின் நடிப்புக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். 

‘மஜிலி’ திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி அடையாளம் உருவாக்கிய இயக்குநர் சிவ நிர்வாணா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.


படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியானதும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வழக்கமான மாஸ் ஹீரோ தோற்றத்தை விட்டு விலகி, ஐயப்ப பக்தராக தலையில் இருமுடி சுமந்தபடி ரவி தேஜா காட்சியளித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த தோற்றம் படத்தின் கதைக்களம் குறித்து பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ‘இருமுடி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆன்மிகம், குடும்ப உணர்வுகள், மனித உறவுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றின் கலவையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

மாஸ் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்த ரவி தேஜா, இந்த முறை உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தின் மூலம் புதிய அனுபவத்தை வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் ‘இருமுடி’ திரைப்படம், ரவி தேஜாவின் திரைப்பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக மாறுமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement