சின்னத்திரையில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" தொடரில் நடித்து பிரபலமானவர் ரியோராஜ்.
பின்னர் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா", "ஆண்பாவம் பொல்லாதது" உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், ரியோராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் முனிஷ்காந்த் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்தில் முனிஷ்காந்த், ரியோராஜுக்கு தாய்மாமன் வேடத்தில் நடிக்கிறார். தென்காசி கிராமச் சூழலில் நடக்கும் இந்தக் கதை, மாமா-மச்சான் உறவின் கலகலப்பான நகைச்சுவை நிறைந்த குடும்பக் கதை என்று அவர் தெரிவித்தார்.
அதன்படி அவர் கூறுகையில், ரொம்ப நாள் கழிச்சு ஒரு குடும்பப் படம் — மாமா மச்சான்னு பேசி நடிக்கிற வாய்ப்பு இந்தப் படத்துல கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த படத்தில், சேரன், மாலவிகா, காத்தாடி ராமஜயம், தீபா, மாகாபா உள்பட பல மூத்த நடிகர்களும் இணைந்துள்ளனர். நாங்க சூட்டிங் ஸ்பாட் போனாலே அவார்டு பங்ஷன் மாதிரி இருக்கும். அவ்வளவு ஆர்டிஸ்ட்கள் இருக்காங்க என்று சிரித்தபடியே கூறிய முனிஷ்காந்த், இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.
நகைச்சுவை நடிகனாக தொடர்ந்து நடிப்பது எப்படி என்று கேட்கப்பட்டபோது, ஒருத்தங்களை சிரிக்க வைக்கிறதுதான் மோஸ்ட் சேலஞ்சிங் ஜாப். அது ரொம்ப கஷ்டமான வேலை. ஹீரோவும் ரொம்ப கஷ்டம்தான். ஆனா சிரிக்க வைக்கிறது வேற மாதிரியான சவால் என்று கூறினார்.
நகைச்சுவை நடிப்பில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து அவர் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினார்.
இன்றைய சினிமா சூழல் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், சேரன் கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி, "முன்பு மக்கள் நம்மை தேடி வந்தாங்க. இப்போ நாமே மக்களை அழைத்து வர வேண்டிய நிலை. அது ரொம்ப சிரமம்" என்று கூறி, இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வளவு சவாலான பணி என்பதை உணர்த்தினார்.
Listen News!