தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக பயணித்து வரும் நடிகர் அரவிந்த் ஆகாஷ், தனது 50வது வயதில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் திரையுலக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் சத்யராஜ் நடித்த சேனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த் ஆகாஷ், பல படங்களில் நடித்திருந்தாலும், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான சென்னை – 600028 திரைப்படமே அவருக்கு தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதன்பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை – 600028 பாகம் 2, மாநாடு உள்ளிட்ட வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் தொடர்ந்து நடித்தார். குறிப்பாக பிரேம்ஜியுடன் இணைந்து அவர் தோன்றிய காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

திரைப்படங்களில் பல ஆண்டுகளாக நடித்திருந்தாலும், கதாநாயகனாக பெரிய வெற்றியைப் பெற முடியாத அரவிந்த் ஆகாஷ், தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில், நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த அவர், தற்போது சாரா என்பவரை திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி, வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட ‘சென்னை – 600028’ குழுவினர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் அரவிந்த் ஆகாஷ் – சாரா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!