தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் விஜய், அஜித், ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும், இசைமீது தனக்கு இருக்கும் சுயாதீன ஆர்வத்தைத் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் அனிருத் இசையமைப்பாளர் ஆன பின்னர், முதன்முதலாக இசையமைத்த சுயாதீன பாடல் என்றால் அது சச்சின் பாடல் தான். கொலவெறி பாடலின் உடைய பாணியில் தனுஷ் உடன் சேர்ந்து அவர் இந்தப் பாடலினை உருவாக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று ஒரு சுயாதீன இசை பாடல் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிருத். அந்த வகையில் "எனக்கென யாரும் இல்லையே.." எனத் தொடங்கி சமீபத்தில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வு படலான "ஊசிங்கோ.." வரை பல பாடல்களினைப் பாடி வருகின்றார்.
இவரின் இசையில் உருவாகும் பாடல்களுக்கு மட்டுமின்றி அனிருத்தின் குரலில் வெளியான பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. அனிருத்தின் குரல் வளத்தை கண்டு வியந்த பிற இசையமைப்பாளர்களும், அவரை தங்களது இசையில் பாடல்களைப் பாடவைத்து அழகு பார்த்தனர்.
அதிலும் குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான், யுவன், தமன், சந்தோஷ் நாராயணன் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் படத்திலும், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் அனிருத் பாடி அசத்தி இருக்கின்றார்.
மேலும் "மெர்சலாயிட்டேன், யாஞ்சி, ஹே மாமா, ஷூட் த குருவி, காந்தக்கண்ணழகி, ஒத்தையடி பாதையில" எனப் பல பாடல்களினைப் பாடி இருக்கின்றார். அனிருத் பாடினாலே அந்த பாடல் சூப்பர் ஹிட் தான் என சொல்லும் அளவுக்கு, பிற இசையமைப்பாளர்கள் இசையில் அனிருத் பாடிய பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போட்டன.
அந்தவகையில் இதுவரை அனிருத் தன் சொந்த குரலில் 150 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். ஆனால் இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் ஒன்று என்னவென்றால், அவர் பிற இசையமைப்பாளர்களுக்காக இதுவரை பாடிய பாடல்களுக்கு சம்பளமே வாங்கியதே இல்லை என்பது தான்.
அதாவது இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் தான் இவ்வாறு செய்வதாகவும் அனிருத்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நம்ம அனிருத்திற்கு இருக்கும் புகழுக்கு அவர் நினைத்தால் ஒரு பாடல் பாட பல லட்சம் ரூபா பணத்தை சம்பளமாக கேட்கலாம். அப்படி இருக்கையில் அவர் சம்பளமே வாங்காமல் இத்தகைய பணியை தொடர்ந்து வருவது என்பது மிகப்பெரிய விஷயம் தான்.
இதனைக் கேள்விப்பட்ட அனிருத் ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!