தூத்துக்குடி அருகே +2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த கொடூர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தலைவர் விஜய் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில், “தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஒரு பள்ளி மாணவி இவ்வாறு கொடூரமாக உயிரிழந்தது மிகவும் கண்டிக்கத்தக்க சம்பவமாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் முதலமைச்சர் செலுத்துகிறார். தமிழகத்தில் கடந்த ஒன்றரை வாரங்களில் மட்டும் ஏராளமான குற்றசம்பவங்கள் நடந்துள்ளது. பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை." என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
Listen News!