தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜேம்ஸ் வசந்தன். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், சமீப காலங்களில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களையும் திறந்தவெளியில் பகிர்ந்து வருவதால் அடிக்கடி செய்திகள் மூலம் கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக விஜய் குறித்து அவர் வெளியிடும் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று ஒரு ஹோட்டலில் உணவருந்தச் சென்றிருந்தபோது, ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இந்த சம்பவத்திற்கு அரசியல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.
ஆனால், பின்னர் வெளிவந்த தகவல்கள் இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது, அவர் தனது காரை ஒரு வீட்டின் வாசலை மறித்தபடி நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் காரின் கண்ணாடியை உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது சாதாரண தகராறாக மாறியுள்ளது.
Listen News!