• Sep 17 2024

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பயந்து காய்ச்சலில் படுத்த சிவாஜி...நடந்த சம்பவம் என்ன தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகராகவும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிறு வயது முதலே நாடகத்தில் அதிக ஆர்வம் காட்டியவர் சிவாஜி. பல நாடகங்களை அரங்கேற்றி அப்பவே மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அதன் விளைவு தான் வெள்ளித்திரையில் அவரை ஒரு நடிகர் திலகமாக காட்ட முடிந்தது.

அவர் ஏற்று நடித்த பல நாடகங்கள் தான் படங்களாக வெளிவந்திருக்கின்றன. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்து ராஜ்ஜியம் என்ற நாடகம் தான் அவரை ஒரு சிறந்த நடிகராக பிரபலப்படுத்தியது.

இதில் சிவாஜியாக நடித்த பிறகு தான் கணேசன் என்ற அவரது பெயர் சிவாஜி கணேசன் ஆக மாறியது. பராசக்தி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான சிவாஜி 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தேசத் தலைவர்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் தேசத் தலைவராகவே மாறினார்.

தான் கண்டிராத தேசத் தலைவர்களை மக்கள் சிவாஜியின் உருவத்தில் கண்டு களித்தனர். அதேபோல புராணங்களின் கதாபாத்திரங்களையும் ஏற்ற நடித்து குறிப்பாக ராஜராஜ சோழன், மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்கள் மக்கள் இவரை ஒரு ராஜாவாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். அதேபோல பாசமலர், வசந்த மாளிகை போன்ற படங்களில் இவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பையும் நாம் காண முடியும்.

இன்னொரு பக்கம் பல பக்தி திரைப்படங்களில் நடித்து கடவுளின் குழந்தையாகவே மாறினார். உதாரணமாக திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ,கந்தன் கருணை போன்ற பக்தி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சிவாஜி அதிக அளவு பேசப்பட்டார். இப்படி எந்த கதாபாத்திரம் ஆனாலும் அதை துணிந்து ஏற்று நடக்கக்கூடிய சிவாஜி ஒரு சமயம் மறுநாள் தான் ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தை நினைத்து அன்று முழுவதும் காய்ச்சலில் அவதிப்பட்டு இருக்கிறார்.

பிரபல பழம்பெரும் இயக்குனரான ஏ சி திரிலோகசந்தரின் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம் சரவணன் அந்த படப்பிடிப்பிற்குள் வந்தாராம். அப்போது சிவாஜி உடல்நிலை சரியில்லாததை போல ஏவிஎம் சரவணன் உணர்ந்திருக்கிறார். நேராக சிவாஜி இடமே சென்று ஏதேனும் உடம்பு சரியில்லையா என கேட்டாராம்.

அதற்கு சிவாஜி என் உடல் அனலாக கொதிக்கிறது. காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் என கூற அதற்கு சரவணன் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே எனக் கூறி இருக்கிறார். அதற்கு சிவாஜி என் காய்ச்சலுக்கு காரணமே நாளை ஒரு நாடகத்தில் நான் ஏற்று நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தை எண்ணி தான் எனக் கூறினாராம். அது ஒரு ஐயர் வேடம் என்றும் அதை நினைத்து தான் எனக்கு காய்ச்சலை வந்து விட்டது என்றும் கூறினாராம்.

அதற்கு சரவணன் ஐயர் வேடம் தானே? பாஷையை மாற்றி பேசினால் போதும். அதை நினைத்து ஏன் இந்த அளவுக்கு அவதிப்படுகிறீர்கள் என கேட்டாராம். அதற்கு சிவாஜி “பாஷையை மட்டும் மாற்றிப் பேசினால் போதுமா? உடல் அசைவுகளையும் அதற்கேற்றார் போல மாற்ற வேண்டும் அல்லவா? அது மட்டுமில்லாமல் அது சாதாரண அய்யர் வேடம் இல்லை. பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் அது. அதனால் தான் அதை நினைத்து எனக்கு காய்ச்சலே வந்து விட்டது” எனக் கூறியிருக்கிறார்.அந்த நாடகம் வியட்நாம் வீடு என்ற நாடகமாம்.

பல நூறு கதாபாத்திரங்களுக்கு மேல் நடித்த சிவாஜி ஒரு நடிகர் திலகமாக மாறி இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் நாளை நடிக்கப் போகும் கதாபாத்திரத்தை எண்ணி அவர் பதற்றம் அடைவது தான். ஆனால் இன்று உள்ள தலைமுறை நடிகர்கள் ஒரு படத்தில் நடித்தால் கூட தான் ஒரு பெரிய ஹீரோ என நினைத்து இறுமாப்பு பட்டுக் கொள்கிறார்கள். இதில் சிவாஜி ஒரு விதிவிலக்கு என பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.


Advertisement

Advertisement